திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது மற்றும் சாராயம் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மதுவிலக்கு போலீசார் நேற்றுமுன்தினம் சோழங்கநல்லூரில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மொபட்டை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். பின்னர் எட்டியலூரை சேர்ந்த பன்னீர்(வயது46) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மொபட்டில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 40 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
7 பேர் கைது
இதேபோல் சோழங்கநல்லூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த வடகரையை சேர்ந்த அய்யப்பன் (21), நன்னிலம் கந்தன்குடி சோதனை சாவடி அருகில் மேலருத்திரமங்கையை சேர்ந்த வீரக்குமார் (37), திருபயத்தாங்குடியை சேர்ந்த விமல்ராஜ் (22), அம்மனூரை சேர்ந்த ராஜ்குமார் (22), குடவாசலை சேர்ந்த பிரவீன் (23), திருத்துறைப்பூண்டி ஆண்டாங்கரையில் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (35), ஆதனூர் பகுதியில் சீனிவாசன் (52) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து 41 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.