மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் மதுபோதையில் குழந்தைகளை பஸ் நிலையத்தில் தவிக்க விட்ட தந்தை

கோயம்பேட்டில் மதுபோதையில் குழந்தைகளை பஸ் நிலையத்தில் தவிக்க விட்ட தந்தையை எச்சரித்த போலீசார், சிறுவர்களை தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

அயனாவரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு தனது 2 மகன்களுடன் வந்த முருகன், பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் உட்கார வைத்து விட்டு அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளார்.

இதையடுத்து நீண்ட நேரமாகியும் தனது தந்தை வராததால் அச்சமடைந்த சிறுவர்கள் இருவரும் அழுது கொண்டிருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோயம்பேடு போலீசார் சிறுவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அவர்களது பெற்றோர் குறித்து விசாரித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், தனது மகன்களை காணவில்லை என புகார் கொடுப்பதற்காக போலீஸ் நிலையத்திற்கு வந்த முருகன் அங்கு தனது 2 மகன்களும் இருப்பதை கண்டு கட்டி பிடித்து அழுதார். அப்போது அவரிடம் விசாரித்தபோது, குடிபோதையில் பிள்ளைகளை அழைத்து செல்லாமல் பஸ் நிலையத்தில் மறந்து சென்று விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை எச்சரித்த போலீசார், சிறுவர்களை தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.