குலசேகரன்பட்டினம்:
உடன்குடி வாரச்சந்தை பின்புறம் காட்டுப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, டேவிட் மற்றும் போலீசார் அங்கு சென்று, மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த உடன்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (வயது 46) என்பவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவரிடம் இருந்து 29 மதுபாட்டில்கள் மற்றும் கொரோனா காலங்களில் இதுவரை மது விற்பனை செய்த ரொக்கப்பணம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 30 மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர்.
இதேபோன்று உடன்குடியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பாலாஜி என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சந்தையடியூர் பகுதியில் மது விற்றதாக கோபி (35) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.