திருப்பூர்,
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யக்கோரியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பார்வையாளர் பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். திருப்பூர் தெற்கு தொகுதி பார்வையாளர் இன்பராஜ் முன்னிலை வகித்தார்.
தமிழக விவசாயிகள் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து விவசாய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜலிங்கம் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.