சங்கராபுரம்,
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் துணை கலெக்டரும், (சமூக பாதுகாப்பு திட்டம்), கொரோனா தடுப்புப்பணி மண்டல அலுவலருமான ராஜாமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கராபுரத்தில் ஊடங்கு விதிமுறைப்படி அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளதா? என்பதை அவர் பார்வையிட்டார். சிலர் முக கவசம் அணியாமல் சாலையில் சென்றனர். அவர்களிடம் கொரோனா பரவலை தடுக்க கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என துணை கலெக்டர் ராஜாமணி வலியுறுத்தினார். தொடர்ந்து அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், ஊடங்கு விதிமுறைகளை மீறி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெளியூரில் இருந்து காரில் வருபவர்கள் இ-பதிவு வைத்துள்ளனரா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
விழிப்புணர்வு ஓவியம்
தொடர்ந்து சங்கராபுரம் மும்முனை ரோட்டில கொரோனாவை ஒழிப்போம், தேசம் காப்போம் என்ற வாசகங்களுடன் ஓவியர் சங்கத்தினரால் வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு ஓவியத்தை துணை கலெக்டர் ராஜாமணி பார்வையிட்டார். அப்போது தாசில்தார் சையத்காதர், இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், வருவாய் ஆய்வாளர் திருமால், கிராம நிர்வாக அலுவலர் நிமிலன் உள்பட பலர் உடன் இருந்தனர்.