மாவட்ட செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு நடிகை ரியாவிடம் 2-வது நாளாக சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி விசாரணை

சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக 2-வது நாளாக நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

மும்பை,

34 வயது இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்டவர்கள் மீது பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. டெல்லியில் இருந்து வந்து மும்பையில் முகாமிட்டு இருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் திருப்திகரமான பதிலை அளிக்காததால் அவரிடம் மீண்டும் விசாரிக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது.

அதன்படி நேற்று மதியம் 1.30 மணியளவில் நடிகை ரியா போலீஸ் பாதுகாப்புடன் சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஒ. விருந்தினா மாளிகைக்கு வந்தார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 7 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

நேற்றைய விசாரணைக்கு ரியாவின் சகோதரர் சோவிக், சுஷாந்த் சிங்கின் கணக்காளர் ராஜத் மேவதி, மேலாளர் சாமுவல் மிரந்தா ஆகியோரும் அழைக்கப்பட்டு இருந்தனர். விசாரணை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையை நடிகை ரியாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சி.பி.ஐ. கேட்டு கொண்டதன் பேரில் ரியாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளோம் என்றார்.