அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளின் பயன்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்கள், ஆழ்துளை கிணறு வெட்டுவதற்கான உரிமம் வைத்திருக்கும் நபர் அல்லது கிணற்றின் உரிமையாளர் தங்கள் இடத்தில் உள்ள கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணல், கற்கள் கொண்டு தரை மட்டம் வரை சமதளமாக கண்டிப்பாக மூடிவிடவேண்டும். உறுதியான மூடியை கொண்டு ஆழ்குழாய் கிணற்றின் வாயினை மூடி வைக்க வேண்டும். மேலும் பயன்பாடு இல்லாத கிணறுகளை மூடத் தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பாலாஜி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.