கரூர் 
மாவட்ட செய்திகள்

பில்லூரில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

தோகைமலை அருகே பில்லூரில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தினை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

தோகைமலை,

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பில்லூரில் பிரசித்தி பெற்ற பாம்பலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 8 ஊர் கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலில் 8 ஊர் கிராம மக்கள் சார்பாக 4 ஆண்டுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு திருவிழா நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் திருவிழா நடத்துவதற்காக பெரியோர்கள் முடிவு எடுக்கப்பட்டு கடந்த வாரம் திருவிழா தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் கோவிலை சுற்றியுள்ள நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சாமி புறப்படும் போது பல்லக்கு வாகனங்கள் செல்வதற்கு போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடியான சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

இதனையடுத்து தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், வருவாய் அதிகாரி மாதேஸ்வரி, கிராம நிர்வாக அதிகாரி தேன்மொழி, பில்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன், ஊராட்சி செயலாளர் கலியராஜ் மற்றும் அதிகாரிகள் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை ஆய்வு செய்தனர். மேலும் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கிராம பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நில அளவையர் மற்றும் அதிகாரிகள் வந்து, கோவில் நிலத்தை அளவீடு செய்தனர். மேலும் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் உடனடியாக அதனை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.