மாவட்ட செய்திகள்

மாநில அரசின் தலைமை செயலாளர் அஜாய் மேத்தாவின் பதவிகாலம் 6 மாதம் நீட்டிப்பு

மராட்டிய அரசின் தலைமை செயலாளர் அஜாய் மேத்தாவின் பதவிகாலம் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய அரசின் தலைமை செயலாளர் அஜாய் மேத்தா வருகிற 30-ந் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில், மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அஜாய் மேத்தாவின் பதவி காலம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

1984-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியை சேர்ந்த அஜாய் மேத்தா கடந்த மே மாதம் மும்பை மாநகராட்சி கமிஷனராக இருந்த போது, அப்போதைய தலைமை செயலாளராக இருந்த யு.பி.எஸ். மதான் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

வழக்கத்தில் இல்லாதது

மாநில தலைமை செயலாளர் ஒருவரின் பணி காலம் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்படுவது இதுவரை வழக்கத்தில் இல்லாதது. யு.பி.எஸ். மதானுக்கு முன்பு தலைமை செயலாளராக இருந்தவர்களுக்கு ஒன்று முதல் 3 மாதம் வரை மட்டுமே பணி நீட்டிப்பு செய்யப்பட்டதாக தலைமை செயலக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பர்வேயின் பணிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.