விழுப்புரம்,
விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் நேற்று காலை நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் மூலம் தியேட்டர் ஹவுஸ்புல் ஆனது. படம் திரையிடப்பட்டு 10 நிமிடம் ஓடிய நிலையில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 15 நிமிட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் பலரும் கோஷமிட்டபடி தியேட்டரை விட்டு வெளியே வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டனர். பென்டிரைவ்வில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக காட்சிகளை திரையிட முடியவில்லை என்று தியேட்டர் ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள், தியேட்டர் முன்பு ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று ரசிகர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் பென்டிரைவ் கோளாறு சரிசெய்யப்பட்டதும் மீண்டும் சினிமா காட்சிகள் முழுவதுமாக திரையிடப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் படம் பார்த்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.