மாவட்ட செய்திகள்

குடியாத்தம் பகுதியில் புதிய பாலங்கள் கட்ட ரூ.6 கோடி ஒதுக்கீடு

குடியாத்தம் பகுதியில் புதிய பாலங்கள் கட்ட ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடியாத்தம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கே.கே.வி.அருண்முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.எஸ்.யுவராஜ், எஸ்.சாந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் குசலகுமாரிசேகர், உத்தரகுமாரி, ஒன்றிய பொறியாளர்கள் குகன், புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கூறினார்கள்.

கூட்டத்தில் குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்திலேயே சார்பதிவாளர் அலுவலகம், வேளாண்மை அலுவலகம் உள்ளிட்ட அலுவலங்கள் புதிதாக கட்ட அரசுக்கு கோரிக்கை விடுப்பது. குடியாத்தம் நகரில் உள்ள கால்நடை மருத்துவமனையை கொண்டசமுத்திரம் பகுதிக்கு மாற்ற வேண்டும். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலங்களுக்கு பதில் புதிதாக 6 பாலங்கள் அமைக்க நபார்டு வங்கி திட்டத்தில் ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சீவூர்-மூங்கப்பட்டு செல்லும் சாலை, அக்ராவரம் நடுகட்டை செல்லும் பகுதி, சூராளூர் பகுதி, மூங்கப்பட்டு- மீனூர்மலை, பட்டு-ஆலாம்பட்டரை, உப்பரபள்ளி ஆகிய 6 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும் என்றும், வட்டார வளர்ச்சி அலுவலகம் இடிக்கப்பட்டு விரைவில் புதிதாக நவீன வசதிகள்அதே இடத்தில் கட்டப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராமாலை கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினார்கள்.