மதுரை,
திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக தினசரி சென்னைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்(16724) இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ரெயில் நேற்று இரவு 11 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது. அப்போது ரெயிலில் உள்ள குளிரூட்டப்பட்ட பெட்டிகள் மற்றும் 2ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் தண்ணீர் இல்லை என்று கூறி பயணிகள் மதுரை ரெயில்நிலையத்தில் உள்ள பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரெயில் மதுரையில் இருந்து புறப்படும்போது அபாயசங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்திய பயணிகள் பிளாட்பாரத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளுக்கும் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதன் பின்னரே இரவு 11.45 மணிக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் நேற்று இரவு மதுரை ரெயில்நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, திருவனந்தபுரம் ரெயில்நிலையத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும். ஆனால், அங்கு தண்ணீர் நிரப்ப தவறியதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்று தெரிவித்தனர்.