ஜோலார்பேட்டை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையிலிருந்து பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
28 ஆண்டுகளாக
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்க அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்அமைச்சரிடம் மனு அளித்தார். அதன்படி பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 28&ந் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் காவலுடன் பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம் 28ந் தேதி பரோல் முடிந்து புழல் சிறைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் பாதி வழியிலேயே மீண்டும் பேரறிவாளன் வீட்டிற்கு திரும்பினார்.
சிகிச்சை
இதனையடுத்து சிறுநீரக தொற்றுக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமிழக அரசு வழங்கிய பரோல் காலம் முடிவடைய இருந்தது. இதனால் பேரறிவாளன் புழல் சிறைக்கு செல்ல இருந்த நிலையில் மேலும் பரோலை நீட்டிக்க இவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். இதனையடுத்து 3&வது முறையாக மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த மாதம் 27&ந் தேதியுடன் பரோல் காலம் முடிந்து சென்னை புழல் சிறையில் செல்ல இருந்த நிலையில் 4&வது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் காலம் நீட்டிக்கப்பட்டது. கடந்த 13&ந் தேதி சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
5வது முறையாக நீட்டிப்பு
இந்த நிலையில் தமிழக அரசு 5&வது முறையாக மேலும் 30 நாட்களுக்கு பரோல் காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது இதனால் பலத்த போலீஸ் காவலுடன் பேரறிவாளன் வீட்டிலேயே இருந்து வருகிறார்.