நாமக்கல்,
அகில இந்திய அளவில் ஆன்-லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு அனுமதி அளிக்க புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு உத்தேசித்து உள்ளது. ஆன்-லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கடைஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் என மாவட்டம் முழுவதும் 600 மருந்து கடைகள் மூடப்பட்டு இருந்தன.
முழு வெற்றி
இது குறித்து நாமக்கல் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் அன்பழகன் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 650 மருந்து கடைகள் உள்ளன. இவற்றில் 600 கடைகள் ஆன்-லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூடப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரி வளாகங்களில் உள்ள 50 கடைகள் மட்டுமே பொதுமக்களின் நலன் கருதி திறக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் மருந்து வணிகர்களின் போராட்டம் முழு வெற்றியை அடைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மருந்து வணிகர்களின் போராட்டம் காரணமாக நேற்று நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள அம்மா மருந்தகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.