மாவட்ட செய்திகள்

உச்சிப்புளி அருகே செயற்கையாக கள் தயாரித்து விற்றவர் கைது

உச்சிப்புளி அருகே செயற்கையாக கள் தயாரித்து விற்றவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பனைக்குளம்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாராயம் மற்றும் கள் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை கிராமத்தை சேர்ந்த முருகவேல் (வயது 53) என்பவர் செயற்கையாக கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது பிரப்பன்வலசை பனங்காட்டு பகுதியில் போதையில் மயங்கி கிடந்த முருகவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது அருகில் இருந்த 600 லிட்டர் கள் மற்றும் 200 லிட்டர் செயற்கை ஊறல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகவேலை விருதுநகர் சிறையில் அடைத்தனர்.