நெகமம்,
சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்தவர் மணி (வயது 57), கயிறு வியாபாரி. இவர் பொள்ளாச்சியில் இருந்து கயிறு வாங்கிவிட்டு ஒரு ஆட்டோவில் பெதப்பம்பட்டி நோக்கி சென்றார்.
ஆட்டோவை சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பெருமாள் (61) ஓட்டினார். அந்த ஆட்டோ, நெகமத்தை அடுத்த ஏரிப்பட்டி அருகே வந்தபோது திடீரென்று ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதில் பெருமாள், மணி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.