புதுச்சேரி

தலைகீழாக நின்று 'பாசிக்' ஊழியர்கள் போராட்டம்

நிலுவை சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ‘பாசிக்’ ஊழியர்கள் இன்று தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

நிலுவை சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 'பாசிக்' ஊழியர்கள் இன்று தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டம்

நிலுவையில் உள்ள 113 மாத நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும். எதிர்வரும் காலங்களில் மாதந்தோறும் சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், தினக்கூலி ஊழியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் தலைமை அலுவலகத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை.

தலைகீழாக நின்று...

அவர்களது போராட்டம் இன்று 12-வது நாளாக தொடர்ந்தது. இன்று ஊழியர்களில் சிலர் சிறிது நேரம் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைகீழாக நிற்பவர்கள் கீழே விழுந்து விடாதபடி, சிலர் அவர்களின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றனர்.

போராட்டத்துக்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏ.ஐ.டி.யு.சி. கவுரவ தலைவர் அபிசேகம், பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். போராட்டத்தில் பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தராசு, மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.