மும்பை,
பெஸ்ட் பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இலவச பயணம்
மும்பையில் தற்போது 3,700 பெஸ்ட் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத பஸ்கள் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் தனியார் ஒப்பந்த டிரைவர்கள் தங்களை பெஸ்ட் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று அதிகாலை போராட்டத்தில் குதித்தனர். சிவாஜிநகர் பஸ் டெப்போவை சேர்ந்த சுமார் 100 தனியார் ஒப்பந்த டிரைவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் காலை 10 மணி வரை நடந்தது.
சேவை பாதிப்பு
இந்தநிலையில் தனியார் ஒப்பந்த நிறுவனம், ஒப்பந்த டிரைவர்களுக்கு இலவச பஸ் பாசை தருவதாக உறுதி அளித்தது. இதையடுத்து டிரைவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.
பெஸ்ட் ஒப்பந்த டிரைவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் சேவை பாதித்து, பொதுமக்கள் அவதி அடைந்தனர்.