ஆண்டிப்பட்டி:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாவட்டத்திற்கு உள்ளேயும் பயணிக்க இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட எல்லைகளிலும் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பொதுமக்கள் இ-பதிவு முறையை சரிவர கடைபிடிப்பதில்லை. மாறாக மோட்டார்சைக்கிளில் எளிதாக மாவட்டம் விட்டு மாவட்டம் கடந்து செல்கின்றனர்.
தேனி-மதுரை மாவட்ட எல்லையான கணவாய் மலைப்பகுதியில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்த வழியாக மோட்டார்சைக்கிளில் அதிகமான மக்கள் சென்ற வண்ணமே உள்ளனர். அவர்களை போலீசார் மறித்து விசாரணை செய்தால் அனைவருமே துக்க நிகழ்ச்சி, மருத்துவமனைக்கு செல்லுதல், விவசாய பணி என தவிர்க்க முடியாத காரணங்களை சொல்கின்றனர். இவ்வாறு அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பலர் இறப்பதை கண்கூடாக பார்த்தாலும் மக்கள் கொஞ்சமும் பயமின்றி மோட்டார்சைக்கிள்களில் செல்வது நோய்பரவலை மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறையினர் வேதனை தெரிவித்தனர்.