சென்னை,
சென்னை அடையாறில் கடந்த மாதம் பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் விகாஸ் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் போலீசார் வெவ்வேறு இடங்களில் மீட்டனர். இதில் பீகார் இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே சமயம், அந்த இளைஞரின் மனைவி மற்றும் 2 வயது குழந்தையின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த பீகார் பெண்ணின் உறவினர் ஒருவர் சென்னைக்கு வந்திருந்தார். அவர் போலீசாரிடம், உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தங்களிடம் வசதி இல்லை என தெரிவித்தார். இதையடுத்து பீகார் பெண் மற்றும் அவரது குழந்தை ஆகியோரின் உடல்களை பீகார் கொண்டு செல்ல சென்னை போலீசார் பீகாரைச் சேர்ந்த அமைப்புகளின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பாக தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் இருவரின் உடல்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.