மாவட்ட செய்திகள்

பா.ஜனதா எம்.எல்.ஏ. கார் மோதி 2 பேர் பலி

டிட்வாலா அருகே பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், இளம்பெண் பலியானார்கள்.

மும்பை,

முர்பாடு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கிசான் கதோரே. இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் டிட்வாலா அருகே, ராயதே- அம்பர்நாத் ரோட்டில் வாகுலி கிராமப்பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார். காரை எம்.எல்.ஏ.வின் டிரைவர் ஓட்டியுள்ளார்.

மேலும் காரில் எம்.எல்.ஏ. மற்றும் அவரது பாதுகாவலர் இருந்து உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக எம்.எல்.ஏ.வின் கார் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர், இளம்பெண் படுகாயம் அடைந்தனர். மேலும் எம்.எல்.ஏ.வின் டிரைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சென்ற போலீசார் வாலிபர், இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இந்தநிலையில் இளம்பெண்ணும் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் பலியானது கல்யாணை சேர்ந்த அமித் சிங்(வயது22), சிம்ரன்(18) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து டிட்வாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ.வின் கார் மோதி வாலிபர், இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.