புதுச்சேரி

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டு வீச்சு

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் மாகியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாகி

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் மாகியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள்

மாகி பள்ளூரை சேர்ந்தவர் சஜீஷ் (வயது 37). இவர் தனது மகளின் பிறந்தநாளை வீட்டில் வைத்து கொண்டாடினார். இதற்காக அவர் அந்த பகுதியை சேர்ந்த பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அவர்களும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவரது வீட்டருகே உள்ள அம்பேத்கர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ந்துபோன அவர்கள் அங்கு சென்று பார்த்த போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

வெடிகுண்டு வீச்சு

இதைத்தொடர்ந்து மாகி போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடும்போது, பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சஜீஸ் பா.ஜ.க.வினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே அவரை மிரட்டும் விதமாக இந்த வெடிகுண்டு வீசப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஜிஷ்ணு, சம்சு, நிஷாத் ஆகியோர் மீது மாகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.