கிருஷ்ணகிரி:
சின்னதக்கேப்பள்ளியில் எருது விடும் விழா நடந்தது. இதில் 500 காளைகளின் ஓட்டத்தை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக 2 மாதங்கள் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரியை அடுத்த சின்னதக்கேப்பள்ளி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இருந்தும், அருகில் உள்ள மாநிலமான ஆந்திராவில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தபடி ஓடின.
உரிமையாளர்களுக்கு பரிசு
எருது விடும் விழாவுக்கு முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டனர். பின்னர் ஓட்டப்பாதையில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவை காண சின்னதக்கேப்பள்ளி, கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் காளைகள் ஓடும் இடத்தை ஒட்டி நீண்ட தூரத்திற்கு கட்டப்பட்ட தடுப்புகளின் ஓரம் நின்று காளைகளின் ஓட்டத்தை கண்டு ரசித்தனர்.