மாவட்ட செய்திகள்

பர்கூர், கெலமங்கலம் பகுதிகளில் எருது விடும் விழா ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

பர்கூர் கெலமங்கலம் பகுதிகளில் நடந்த எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

பர்கூர்:

பர்கூர், கெலமங்கலம் பகுதிகளில் நடந்த எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

எருது விடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

இந்த காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். விழாவையொட்டி பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கெலமங்கலம்

கெலமங்கலம் ஒன்றியம் ஜெக்கேரி ஊராட்சி ஒன்னு குறுக்கை கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் சூளகிரி, ஓசூர், உத்தனப்பள்ளி, அஞ்செட்டி, பாலதோட்டனப்பள்ளி, தளி, ராயக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளின் கொம்புகளில் அலங்கார தட்டிகள் கட்டி ஓடவிட்டனர். விழாவில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு காளை மடக்கி பிடிக்க முயன்றனர்.

இந்த எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதில் காயம் அடைந்தவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் முதல் உதவி செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர்கவுண்டர் சிவப்பா, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராமன் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர். தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.