கடலூர்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புச்சுவரை தாண்டி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பஸ் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் (தரணி, நிஷாந்த், விநாயகமூர்த்தி) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். மேலும், பஸ்சில் பயணித்த சிலரும் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.