சென்னை,
தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சம் என்ற பாணியை கையில் எடுத்துவிட்டது. விலை உயர்ந்தாலே உச்சம் என்ற போக்கிலேயே ‘கிடுகிடு'வென அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. ஆண்டின் முதல் மாதமான இம்மாத தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு பவுன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
அதன்பின்னர், தங்கம் விலை ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கியது. அதிலும் கடந்த 12-ந்தேதிக்கு பிறகு தங்கம் விலையின் வேகம் யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது. சில நாட்கள் தங்கம் விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
அந்த வகையில் நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.1,190-ம், பவுனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.25-ம், கிலோவுக்கு ரூ.25 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.425-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.600-ம், பவுனுக்கு ரூ.4 ஆயிரத்து 800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 200-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதைபோல வெள்ளியும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.415-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.4,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
உலக நாடுகளில் நிலவும் போர்ச்சூழல், நிச்சயமற்ற பொருளாதாரத் தன்மை, பங்குச்சந்தையை காட்டிலும் தங்கத்தின் மீது நம்பிக்கை அதிகரிப்பு, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கட்டுக்கடங்காமல் தாறுமாறாக ஏற்றம் கண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.