மாவட்ட செய்திகள்

வேடசந்தூர் அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

வேடசந்தூர் அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டது.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. நேற்று காலை இவர், தனது தோட்டத்தில் கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்குள்ள 70 அடி ஆழ கிணற்றில் அந்த கன்றுக்குட்டி தவறி விழுந்தது.

இதை பார்த்த பழனிசாமி, இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் போஸ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை ராட்சத கூடை மூலம் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

பின்னர் அந்த கன்றுக்குட்டிக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.