மாவட்ட செய்திகள்

பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேரலாம் - கலெக்டர் தகவல்

பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேரலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை,

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சிவகங்கை மாவட்டத்தில் முழு வடிவில் செயல்படுத்தப்பட உள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிவகங்கை மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் அரசு சாரா வாழ்நாள் மற்றும் சாதாரண உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், குறைந்தபட்ச வயது 18 ஆகும். அரசியல் சார்பற்றவராக இருத்தல் வேண்டும். குற்ற வழக்குகளில் தொடர்பற்றவராக இருத்தல் வேண்டும். விலங்குகள் மீது அதீத பற்றுள்ள ஆர்வலராக இருத்தல் வேண்டும். முன்பு விண்ணப்பித்தவர்களும் மேற்காணும் தகுதியின் அடிப்படையில் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், சிவகங்கை-630561 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.