திருப்பத்தூர்,
சிங்கம்புணரி பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டியன்(வயது 27). இவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருதுபாண்டியன் சிறுமியை அழைத்துச்சென்று கடந்த ஏப்ரல் 26-ந் தேதி அரளிப்பாறையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிங்கம்புணரியைச்சேர்ந்த மகளிர் நல அலுவலருக்கு புகார் வந்தது. இதனையடுத்து மகளிர் நல அலுவலர் அமிர்தம் சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் இருவரது வீட்டிலும் விசாரித்துள்ளார். திருமணம் நடந்தது உண்மையென தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகளிர் நல அலுவலர் அமிர்தம் நேற்று முன்தினம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சித்திரைசெல்வி நேற்று மருதுபாண்டியன் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.