மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை

கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது

கரூர்
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது வெளியிடங்களுக்கு வரும் வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். தேவையின்றி வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்தநிலையில் கரூர் மாவட்ட எல்லையான வாங்கல் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்தவர்களை நிறுத்தி எதற்காக வெளியே செல்கிறீர்கள்? என்று விசாரித்ததுடன், இ-பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் உடனிருந்தார்.
பின்னர், போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் நிருபர்களிடம் கூறியதாவது:- ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் 9-வது நாளாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில் 8 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.