தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் அர்ஜுன். முதல்வன், ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரங்கள் பேசப்பட்டன. தற்போது பிற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். வில்லன் வேடங்களும் ஏற்கிறார். தற்போது ஐஸ்வர்யா ராஜேசுடன் புதிய படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே சேவகன், பிரதாப், தாயின் மணிக்கொடி, ஜெய்ஹிந்த் 2, ஏழுமலை உள்ளிட்ட பல படங்களை அர்ஜுன் டைரக்டு செய்து இருந்தார். 4 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் பிரேமா பரஹா என்ற படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அர்ஜுன் மீண்டும் படம் இயக்க வருகிறார். அவர் டைரக்டு செய்ய உள்ள படம் தெலுங்கில் தயாராக உள்ளது. இந்த படத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளார். நாயகனாக விஷ்வக் சென் நடிக்கிறார். ஏற்கனவே தமிழில் பட்டத்து யானை படத்தில் விஷால் ஜோடியாக ஐஸ்வர்யா நடித்து இருந்தார். தமிழ், கன்னட மொழியில் வெளியான சொல்லி விடவா படத்திலும் நடித்துள்ளார்.