சினிமா செய்திகள்

வழிதவறிய நடிகர் மம்மூட்டி... 10 கி.மீ. பைக்கில் சென்று வழிகாட்டிய நபர்!

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காரைக்குடி,

தமிழகத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரளாவுக்கு சென்ற நடிகர் மம்மூட்டி, நள்ளிரவில் வழிதவறிய நிலையில், அவருக்கு ஒருவர் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் சென்று வழிகாட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு

நடிகர் மம்மூட்டி நடிப்பில் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் காரைக்குடி அருகே நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு நள்ளிரவில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மம்மூட்டி கேரளாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். கூகுள் மேப் உதவியுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது, திருப்பத்தூர் பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் வழிதவறிய மம்மூட்டியும், அவருடன் பயணித்த தயாரிப்பாளர் மற்றும் கார் ஓட்டுநர் உள்ளிட்டோரும் மீண்டும் தாங்கள் தங்கியிருந்த விடுதிக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

3.30 மணிக்கு உதவிய பாண்டியன்

பின்னர் போகும் வழியில் சுமார் அதிகாலை 3.30 மணியளவில் பெட்ரோல் பங்க் அருகே ஒருவரிடம் விசாரிக்க, அங்கு ஒருவர் தனது பைக்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் வந்து பிரதான சாலை வரைக்கும் வழிகாட்டியுள்ளார்.

"எனது நண்பன்" எனக் கூறிய மம்மூட்டி

இதையடுத்து மம்மூட்டி, பாண்டியனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டு அவரை கட்டித்தழுவினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பாண்டியன் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், கேரளாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்மூட்டி, தன்னை "எனது நண்பன்" எனக் கூறி கட்டித்தழுவியதை தன்னால் மறக்க முடியாது என்றும், அதனை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.