ஐதராபாத்
2022 ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமா இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பாக்ஸ் ஆபிசில் சாதனைபுரிந்த ஆண்டாகும்.இந்திய சினிமாவில், குறிப்பாக தென்னிந்திய சினிமாவின் உலகப் பார்வையை மாற்றியுள்ளது. இருப்பினும், சில தென்னிந்திய நடிகர்கள் தென்னிந்திய சினிமாவுக்கு இந்திய அரசாங்கத்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று உணர்கிறார்கள். இது குறித்து நடிகைகள் ஜெயசுதாவும், ஜெயபிரதாவும் தற்போது தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர்.
நடிகை ஜெயசுதா நடிகை ஜெயபிரதாவுடன் சமீபத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபிள் என்ற டாக் ஷோவில் கலந்து கொண்டார்.அதில் அவர் திரைப்படத் துறையில் தென்னக கலைஞர்களை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என கூறினார்.
நடிகை கங்கனா ரனாவத்தை ஒரு உதாரணமாக கூறினார். கங்கனா 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு எவ்வாறு விருது வழங்கபட்டது. ஆனால் பல தசாப்தங்களாக தொழில்துறையில் பணியாற்றிய நடிகர்களுக்கு அவர்களின் பணிக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கூறினார்.
அவர் கூறும் போது கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் எனக்கு கவலையில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. இருப்பினும், அவர் 10 படங்கள் நடிப்பதற்குள் அந்த விருதைப் பெற்றார். இங்கு, நாங்கள் பல படங்களில் பணியாற்றிய இன்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை
கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டு கிடைக்கவில்லை என கூறினார்.
நடிகை ஜெயபிரதா கூறும் போது நாம் விருதுகளை மரியாதையுடன் பெற வேண்டும். அதைக் கேட்டு வாங்க கூடாது நான் எம்.பி.யாக இருந்தபோது, என்.டி.ஆருக்கு பாரத ரத்னா வழங்கக் கோரிக்கை வைத்தேன். அதை நிறைவேற்ற இன்றுவரை முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்
தென்னிந்திய நடிகர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பாலகிருஷ்ணா இரு நடிகைகளிடமும் ஒப்புக்கொண்டார்.
உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனராக 2002-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் விஜய நிர்மலா இடம் பிடித்தார்.
கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து கங்கனா ரனாவத் பத்மஸ்ரீ விருதைப் பெற்றபோது, பலர் அவருக்கு விருது வழங்குவதை விமர்சித்தனர். ஆளும் பாஜக ஆதரவாளரான நடிகைக்கு விருது வழங்கப்பட்டது என்று கூறினர்.
நடிகை ஜெயசுதா ஐந்து நந்தி விருதுகள் மற்றும் ஐந்து பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உள்பட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் அடித்து உள்ளார்.
தமிழில் குல கவுரவம் முதல் நடிகை விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வாரிசு வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.