சினிமா செய்திகள்

ஓய்வுக்காக ஊட்டி சென்ற நடிகர் ரஜினி: ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

ரஜினிகாந்த், ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து நலம் குறித்து விசாரித்தவர், நிர்வாகிகளுடன் இணைந்து 'போட்டோ'வும் எடுத்துக்கொண்டார்.

ஊட்டி,

நடிகர் ரஜினிகாந்த் நேற்று மதியம் கர்நாடக மாநிலம் மைசூரு வழியாக கார் மூலம் ரகசியமாக ஊட்டிக்கு வந்தடைந்தார். அங்குள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அவரது வருகை, நேற்று இரவு வரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஊட்டிக்கு வந்திருக்கும் தகவல் நேற்று இரவு காட்டுத்தீ போல பரவியது. இதனால் உற்சாகமடைந்த அவரது ரசிகர் மன்றத்தினர், அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலின் முன்பு திடீரென திரண்டு முற்றுகையிட்டனர். ரசிகர்களின் கூட்டம் அதிகரித்ததை அடுத்து, பாதுகாப்பு கருதி ஓட்டலின் பிரதான கேட் உடனடியாக பூட்டப்பட்டது.

சந்திப்பு

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 8.45 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கு காத்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அவர்களின் நலம் குறித்து விசாரித்தவர், நிர்வாகிகளுடன் இணைந்து 'போட்டோ'வும் எடுத்துக் கொண்டார்.

அவரது இந்த திடீர் வருகைக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், அவர் இன்று மதியம் சென்னைக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.