சினிமா செய்திகள்

'மஞ்சுமெல் பாய்ஸ்' படக்குழுவினரை சந்தித்த நடிகர் சிம்பு

'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

சென்னை,

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த மாதம் 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக 'மஞ்சுமெல் பாய்ஸ்' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது 'மஞ்சுமெல் பாய்ஸ்'.

இத்திரைப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம் மலையாள திரைப்படத்துறையில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' பெற்றுள்ளது.

இதனையடுத்து, பல்வேறு தரப்பினரும் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிம்பு மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT