போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை சித்தார்த், மம்முட்டி, பிருதிவிராஜ், அமலாபால், பார்வதி உள்ளிட்டோர் கண்டித்தனர்.
குடியுரிமை சட்டத்தை நடிகை குஷ்பு கடுமையாக எதிர்த்தார். அவர் கூறும்போது, குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவை சிதைக்க கூடியது. அதிகாரம் படைத்தவர்களால் தேசத்தின் எதிர்காலம் சிதைவதை பொறுக்க முடியாது. மோடியும் அமித்ஷாவும் நாட்டின் அமைதிக்கு கேடு செய்கின்றனர். நாடு மத சார்பின்மையால் இயங்குகிறதே தவிர மதத்தினால் அல்ல என்றார்.
குஷ்பு கருத்துக்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறும்போது, இந்தியர்களுக்கு குடியுரிமை பறிக்கப்படுவதுபோல பேசி இருக்கிறார். அந்த பொய்யை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஒழுங்காக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிலையில் குஷ்பு கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளத்தில் பலர் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் குஷ்புவை கண்டிக்கும் வகையில், அம்மா கூத்தாடி தாயே மும்பையில் உங்கள் பிறப்பிடம் இருக்கிறதே. அப்புறம் ஏன் பயப்படுகிறீர்கள் என்று பதிவிட்டார்.
இதனால் கோபமான குஷ்பு உங்க அம்மா பேரு கூத்தாடி என்று சொன்னதுக்கு நன்றி. உங்களோட பெருந்தன்மை பிடிச்சிருக்கு என்று டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.