மும்பை,
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என பின்னர் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து டீப் பேக் மூலம் 'டைகர் 3' திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைப்யின் சண்டை காட்சி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ டீப் பேக் மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கஜோல் வீடியோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கஜோல் ஷாருக்கானுடன் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' ( Dilwale Dulhania Le Jayenge ) படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர். தமிழில் மின்சாரக் கனவு, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.