சினிமா செய்திகள்

கருப்புக்கு முன்... சூர்யாவுடனான மறக்கமுடியாத தருணத்தை நினைவு கூர்ந்த அனகா

’காதல்: தி கோர்’ படப்பிடிப்பின்போது நடந்த மறக்க முடியாத அனுபவத்தை அனகா பகிர்ந்துகொண்டார்.

சென்னை,

மலையாள சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் அனகா. சூர்வாவின் மிகப்பெரிய ரசிகையான அனகா சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ’கருப்பு’ திரைப்படத்தில் அவருடன் நடித்துள்ளார். இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

சூர்யாவை நேரில் பார்க்க முடியாத ஏமாற்றம்

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், காதல்: தி கோர் படப்பிடிப்பின்போது நடந்த மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் 2023-ல் வெளியான 'காதல்: தி கோர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சூர்யா ஒருமுறை சென்றிருந்தார். இப்படத்தில் மம்முட்டியின் மகளாக அனகா நடித்திருந்தார். ஆனால், சூர்யா வந்த அன்று படப்பிடிப்பு இல்லாததால் தன்னால் அவரை நேரில் பார்க்கமுடியவில்லை என்று கூறினார்.

“என் வாழ்க்கையில மறக்க முடியாத தருணம்”

அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த அனகா, "அன்னைக்கு காலையில என்னோட அசிஸ்டெண்ட் எனக்கு போன் பண்ணி, வீடியோ காலில் வர சொன்னாங்க. படத்துக்காக ஒரு வீடியோ கால் ஷூட் எடுக்கணும்னு என்கிட்ட சொல்லியிருந்தாங்க. நானும் காலில் வந்தேன், கொஞ்ச நேரத்துல அந்த ஷூட் முடிஞ்சிருச்சு. அதனால நான் போனை பக்கத்துல வச்சிட்டேன்.

ஆனா, மம்முட்டி சார் நான் இன்னும் லைன்ல தான் இருக்கேனான்னு கேட்டாரு. அப்புறம் அவரு வெளிய போய், அவரோட போனை ஜோதிகா மேம்கிட்ட கொடுத்தாரு. அடுத்த நிமிஷம், எனக்கு முன்னாடி சூர்யா சார் நின்னுகிட்டு இருந்தாரு. என் வாழ்க்கையில என்னால என்னைக்குமே மறக்க முடியாத ஒரு தருணம் அது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.