சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை பூமி பட்னேகர், சினிமாவில் பெண்களை மையமாக கொண்ட கதைகள் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் 'தம் லகா கே ஹைசா', 'சாண்ட் கி ஆங்க்', 'சோஞ்சிரியா', 'பதாய் ஹோ' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர் பூமி பட்னேகர். முன்னணி நடிகையாக திகழும் அவர், சமீபத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் டெல்லி (IFFD) 2026 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ’சினிமாவில் பெண்களை மையமாக கொண்ட கதைகள் குறைந்து வருகின்றன. இது மிகவும் மனவேதனை அளிக்கிறது. ஆனால், ஓடிடி தளங்கள் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன. அதில் பெண்களுக்கு பல வகையான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஓடிடி தளங்கள் அவர்களுக்கு சரியான மேடையாக உள்ளது’ என்றார்.
பூமி பட்னேகர் சமீபத்தில், ’டல்டல்’ என்ற கிரைம் திரில்லர் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர், மும்பையில் நடைபெறும் தொடர் கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது அமேசான் பிரைமில் உள்ளது.