மும்பை,
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் தொடர்ந்த அவதூறு வழக்கு குறித்து நடிகை தனியா சட்டர்ஜி முதன்முறையாக விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் தேவையின்றி பெரிதாக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் இரண்டாம் வாரத்தின் போது, தனியா சாட்டர்ஜி புகைப்படக் கலைஞர்களிடம் பேசும் வீடியோ ஒன்று வைரலானது. அதில், சஹால் தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்குப் பலமுறை பதிலளித்திருப்பதாகவும், ஒருமுறை தன்னை "கியூட்" (Cute) என்று மெசேஜ் செய்ததாகவும் தனது செல்போன் திரையைக் காட்டி கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சஹால் அவர் மீது அவதூறு வழக்குத் தொடரவும் வழிவகுத்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை தனியா மவுனம் கலைத்துள்ளார். அவர் பேசுகையில், ‘யார் மீதும் அவதூறு பரப்பவோ அல்லது ஒருவரது பிம்பத்தைச் சிதைக்கவோ எனக்கு எந்த எண்ணமும் இல்லை. ஐபிஎல் தொடர்பான ஒரு சாதாரண உரையாடலின் போது எதேச்சையாக நடந்தது இது. யாராவது ஒருவரைப் பாராட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? அவர் என்னை 'கியூட்' என்று சொன்னது ஒரு சாதாரண பாராட்டு மட்டுமே. எனக்குப் பாராட்டுகள் பிடிக்கும் என்பதால் அதைச் சொன்னேன். சஹால் நம் நாட்டிற்காகப் பல சாதனைகளைச் செய்துள்ளார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவரை இப்போதும் நான் பாராட்டவே செய்கிறேன். நான் அவரைப் புகழ்ந்துதான் பேசினேன், இழிவுபடுத்தவில்லை. அப்படி இருக்கும்போது அவர் என் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது" என்றார்.
சமூக வலைதளங்கள் இந்தச் சிறிய விஷயத்தைப் பெரிதாக்கிவிட்டதாகவும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் தனியா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.