சென்னை,
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டநிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?’ என்று தெரிவித்திருக்கிறார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. முன்னதாக ’மிக மிக அவசரம்’ படத்திற்கு விருது வழங்கப்படாததற்கு அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிச் சிறப்பிக்கிறார்.
அதனடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.