சினிமா செய்திகள்

தாம்பரம் சானடோரியத்தில் சினிமா படப்பிடிப்பு நடிகை நயன்தாராவை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு

தாம்பரம் சானடோரியத்தில் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நயன்தாராவை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம்,

நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் மீண்டும் நடிகர் விஜய்சேதுபதியும், நடிகை நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள். நடிகை சமந்தாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி. சாலை அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று காலை இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயன்தாராவை நேரில் பார்க்க அப்பகுதியில் ஏராளமான வாலிபர்கள் உள்பட பொதுமக்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த படப்பிடிப்பிற்கு முறையான அனுமதி பெறவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் நயன்தாராவை காண திரண்டிருந்த பொது மக்களை கட்டுப்படுத்த போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

படக்குழு சார்பில் அங்கு தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பொதுமக்களை தடுத்ததால் அவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.