ஐதராபாத்,
மலையாள திரையுலகின் பிரபல நடிகையான ஹனி ரோஸ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாபி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், ஹனி ரோஸுக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் ஹனி ரோஸ் அதிகளவில் படங்களில் நடிக்காத நிலையில், சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் சிரஞ்சீவியின் மகளாக நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சிரஞ்சீவி மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது.
மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ஹனி ரோஸ், வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த அந்த படம் வெற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை அதுவே ஹனி ரோஸ் நடித்த ஒரே தெலுங்கு திரைப்படமாக உள்ளது.
இதற்கிடையில், சில தனிப்பட்ட காரணங்களால் ஹனி ரோஸ் இந்த படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஹனி ரோஸ் அல்லது படக்குழு தரப்பில் இருந்து இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, அவர் படத்திலிருந்து விலகியதாக வெளியாகும் தகவல்கள் தற்போது வதந்தியாகவே பார்க்கப்படுகின்றன.