சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், தற்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவரது அடுத்த படம் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த தாமதத்திற்கு சம்பள பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறியே காரணம் என கூறப்படுகிறது.
தனது அடுத்தடுத்த படங்களுக்கான சம்பளத்தை ரூ.163 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக குறைக்க அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய திரையரங்கு மற்றும் இணைய ஒளிபரப்பு சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை மட்டுமே வழங்க முடியும் என தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
'ஹோம்பாலே பிலிம்ஸ்' நிறுவனம் ரூ.90 கோடி மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளதாகவும், அதேசமயம் பிரபல நில மேம்பாட்டு நிறுவனம் ஒன்று ரூ.110 கோடி வரை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பள விவகாரத்தில் நிலவும் இழுபறி காரணமாக அஜித்தின் அடுத்த பட அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.