சினிமா செய்திகள்

ஜனநாயகன் பட விவகாரம்: பிரதீப் ராகவ் மீதான ஒழுங்கு நடவடிக்கை வாபஸ்

’ஜனநாயகன்’ பட எடிட்டர் பிரதீப் ராகவை சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்ய தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் முன்பு முடிவு செய்திருந்தது.

சென்னை,

‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருந்த படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் மீது தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் மேற்கொள்ளவிருந்த ஒழுங்கு நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட்

’ஜனநாயகன்’ பட லீக் விவகாரத்தில் எடிட்டர் பிரதீப் ராகவை சங்கத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்ய தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் முன்பு முடிவு செய்திருந்தது.

மன்னிப்பு கடிதம்

இந்த நிலையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு பிரதீப் ராகவ் சங்கத்திடம் மன்னிப்பு கடிதம் வழங்கியிருந்தார். அதில், சங்கத்தின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இனி செயல்படுவதாகவும், தனது இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

நடவடிக்கை ரத்து

பிரதீப் ராகவ் அளித்த மன்னிப்பு கடிதத்தை பரிசீலித்த சங்க நிர்வாகம், அவர் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக படத்தொகுப்பாளர் சங்க தலைவர் கோபி தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய படம்

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் படத்தொகுப்பாளராக பிரதீப் ராகவ் பணியாற்ற உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.