சினிமா செய்திகள்

தொடர் வழக்கு :என்னை கைது செய்ய வந்தால்...! -நடிகை கங்கனா ரணாவத்

எந்த நேரமும் நான் கைது செய்யப்படலாம் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்து உள்ளார்.

மும்பை

பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் அதிருப்தி தெரிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக சமூகவலைதளத்தில், சீக்கியர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து அவர் மீது மும்பை போலீசில் சீக்கியர்கள் அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், கங்கனா ரணாவத் வேண்டும் என்றே, உள்நோக்கத்துடன் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தானி அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், சீக்கியர்களை காலிஸ்தானி பயங்கரவாதிகள் எனவும் தெரிவித்ததாக கூறப்பட்டு இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, சீக்கியர்களை அவரது காலணியில் போட்டு நசுக்கினார் எனவும் அவதூறு தெரிவித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் சீக்கிய அமைப்பினர் கங்கனா ரணாவத் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து கங்கனா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை பகிர்ந்து உள்ளார்.அது கங்கனா 2014 ஆம் ஆண்டு போட்டோஷூட்டில் இருந்து எடுத்த ஒரு பழைய படம். அதில் அவர் கையில் மது கோப்பையுடன் போஸ் கொடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிசில் படத்தைப் பகிர்ந்துள்ள கங்கனா, அவர்கள் என்னைக் கைது செய்ய வந்தால், வீட்டில் என் மனநிலை" என்று அதில் அவர் கூறி உள்ளார்.