சென்னை,
தனது படம் 'குருவாயூர் அம்பலநடையில்' திரைப்படத்தின் ரீமேக் என்ற தகவலுக்கு கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கியது.
அனில் ரவிபுடி - வெங்கடேஷ் கூட்டணி இதற்கு முன்பு இணைந்த மூன்று திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
2019-ம் ஆண்டு வெளியான 'எப்2: பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன்' திரைப்படம் உலகளவில் ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு வெளியான 'எப்3' திரைப்படம் ரூ.110 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இதையடுத்து, இந்த கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, ரூ.270 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
தற்போது நான்காவது முறையாக அனில் ரவிபுடி - வெங்கடேஷ் கூட்டணி இணைந்துள்ளதால், முந்தைய படங்களை போலவே இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதற்கிடையில், இந்த படம் மலையாளத்தில் வெளியான 'குருவாயூர் அம்பலநடையில்' திரைப்படத்தின் ரீமேக் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், இந்த தகவலை நடிகை கீர்த்தி சுரேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ரீமேக் அல்ல என்றும், முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.