சினிமா செய்திகள்

நடிகர் ரவி மோகன் விவகாரம்:"ஆண்கள் எப்போதும் தப்பானவர்கள் அல்ல"- நடிகை மீரா சோப்ரா

பிரபல நடிகைகள் ரவி மோகனுக்கு ஆதரவாக கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

சென்னை,

பிரபல நடிகர் ரவி மோகன், 45. ஜெயம், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், இவரது காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விவாகரத்து பெறும் வரை நடிக்க மாட்டேன் உள்ளிட்ட பல அதிர்ச்சி விஷயங்களை பகிர்ந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை மீரா சோப்ரா ரவி மோகனுக்கு ஆதரவாக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஜெயம் ரவியுடன் தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ள நடிகை மீரா சோப்ரா, தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

"தென்னிந்திய படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது ரவி மோகனை எனக்கு நன்றாக தெரியும். சமீபத்தில் அவருடைய விவாகரத்து செய்தியை பார்த்தேன். என்னுடைய கருத்து என்னவென்றால், திருமண முறிவுகளில் எப்போதும் ஆண்களே தப்பானவர்களாக இருக்க மாட்டார்கள்.

பெண்களுக்குச் சாதகமாக இருக்கும் சட்டங்களை, பல பெண்கள் தங்களுக்கு சாதகமாக தவறாகப் பயன்படுத்துவதை நான் பார்க்கிறேன். ஒரு ஆணின் பக்கம் உள்ள நியாயமும் கேட்கப்பட வேண்டும். ரவி மோகன் மிகவும் இனிமையான, எளிமையான மனிதர். அவர் பக்கமுள்ள உண்மையும் நீதியும் வெல்லும் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியருக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாங்கள் பிரிவதாக அறிவித்தனர். இது தொடர்பான வழக்கு தற்போது கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.