சினிமா செய்திகள்

மரணம் தொடர்பானநிகழ்ச்சியில் மேக்கப்: சஞ்சனா கல்ராணியை சாடிய ரசிகர்கள்

மரணம் தொடர்பானநிகழ்ச்சியில் மேக்கப் செய்ததற்காக சஞ்சனா கல்ராணியை சாடிய ரசிகர்கள்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது பற்றி இந்தி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடந்தன. அதில் ஒரு நேரலை விவாத நிகழ்ச்சியில் நடிகை சஞ்சனா கல்ராணி கலந்து கொண்டார். இவர் தமிழில் ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்துள்ளார். தற்போது பெயரிடப்படாத தமிழ் படமொன்றிலும் நடிக்கிறார். டி.வி. நேரலை விவாதத்தில் சஞ்சனா கல்ராணி பங்கேற்றபோது திடீரென்று மேக்கப் போட்டார். மரணம் தொடர்பான நிகழ்ச்சியில் இப்படி மேக்கப் போடலாமா என்று பலரும அவரை கண்டித்தனர்.

இதற்கு பதில் அளித்து சஞ்சனா கல்ராணி கூறியதாவது:-

தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் நான் மேக்கப் போட்டு தயாராகி கொண்டு இருந்த போதே எனக்கு தெரியாமலேயே எனது வீடியோவை ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர். இரண்டு நொடிகள் மோலோட்டமாகத்தான் ஒப்பனை செய்தேன். அதற்காக வெறிபிடித்த சில கழுகுகள் என்னை அவதூறாக பேசியும் கேலி செய்தும் கருத்துக்கள் பதிவிட்டனர். ஒருவரின் மரணம் தொடர்பான கலந்துரையாடலை வைத்து தேவையற்ற சர்ச்சையை கிளப்பாதீர்கள். என்னை இதயம் இல்லாதவள் போல சித்தரிக்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.