கானா பாடகர் மன்னார் முத்து, தெருக்குரல் அறிவின் சர்ச்சை பதிவுக்கு கடும் பதில் அளித்துள்ளார். 2016ல் உருவான ‘மன்னாருன்னா மன்னாரூ’ பாடலை இப்போது தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி வெளியிட்டதாகவும், சந்தோஷ் நாராயணன் மற்றும் ரகிட் என்டர்டெயின்மென்ட் தான் காரணம் என்றும் கூறினார். யாரும் தன்னை ஏமாற்றவில்லை, தேவையான அனைத்தையும் செய்து தந்ததாகவும் விளக்கம் அளித்தார்.
பா.இரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', காலா ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பீட்சா, சூது கவ்வும், வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், 'பரியேறும் பெருமாள், இறுதிச்சுற்று, கர்ணன், ஜகமே தந்திரம், ஜகமே தந்திரம், ரெட்ரோ போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு 'மஜ்ஜா ஸ்டுடியோஸ்' என்ற யூ-டியூப் சேனலில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ என்ற தனியிசைப் பாடல் வெளியானது. இந்த பாடலின் வரிகளை அறிவு எழுதியிருந்தார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு மற்றும் தீ ஆகியோர் பாடிய இந்த பாடல், யூ-டியூபில் மட்டும் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் கானா பாடகர் மன்னார் முத்து எழுதி பாடியிருந்த ‘மன்னாருன்னா மன்னாரூ’ பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலை பாடலாசிரியர்கள் கே.காட்டியன், கானா பிரான்சிஸ் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான ‘காலா’ திரைப்படத்தில் வரும் ‘உரிமை மீட்போம்’ என்ற பாடல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அறிவு. காலாவை தொடர்ந்து வடசென்னை, ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது பாடல்கள் பல பாராட்டுகளை பெற்றாலும் விமர்சனங்களும் வந்தன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட்டடித்தது. யூடியூப்பில் அதிக வியூஸ்களை அள்ளியது. இந்தப் பாடல் வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என பாடகர் அறிவு ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் பாடகர் தெருக்குரல் அறிவு இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். முன்னணி இசைக்கலைஞர்கள் சுயாதீன இசை என்ற பெயரில் கானா பாடல் போன்றவற்றை வெளியிடுகின்றனர். ஆனால் அசல் படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரம், பொருளாதாரப் பலன் வழங்கப்படுவதில்லை என்று பதிவிட்டிருந்தார்.
தெருக்குரல் அறிவு சமீபத்தில் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கானா பாடகர் முத்து பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் தள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை முத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சமீபத்தில் தெருக்குரல் அறிவு ஒரு பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்தேன், மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்னை யாரும் ஏமாற்றவில்லை, ஏமாற்றும் அளவுக்கு யாருக்கும் வேலையெல்லாம் இல்லை. எனக்கு எல்லா வகையிலும் முன்னுரிமை கொடுத்து, நான் கேட்ட பர்சன்டேஜையும் கொடுத்து, நான் எனக்கு இவ்வளவு பர்சன்டேஜ் வேண்டும் எனக் கேட்டேன். அதைக் கொடுத்து, ஒரு கலைஞனுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்தார் அவர்.
இந்தப் பாடலில் எனக்காக நடித்து கொடுக்கச் சொல்லி நான்தான் கேட்டேன். அதற்கு, ‘இல்லடா இது உன் பாட்டு... நீதான் பண்ணணும்’ன்னு சொன்னார். இல்லண்ணா எனக்காக வாங்கண்ணா என நான் கேட்டேன். எனக்காக வந்து ஆட்டோ எல்லாம் ஓட்டி... நம்ம ஏரியாவுக்கெல்லாம் வந்து நிறைய சப்போர்ட் எல்லாம் செய்திருக்கிறார்.
அறிவு சொல்வது போல், மற்றவரிடம் ஏமாறாமல் இருக்கும் அளவுக்கு எனக்கு அறிவு இருக்கிறது. மற்றவர்களை குறை சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என நாம் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்களே என்னுடைய கானா கலைஞர் ஒருவருக்கு பாடல் ஒன்றுக்கு பணம் தரவில்லை. நீங்கள் இருந்த வீட்டுக்கு கரண்ட் பில் கட்டாமல் போயிருக்கிறீர்கள் என்ற விஷயங்களை எல்லாம் கேள்விப்படுகிறேன். முதலில் நீங்கள் சரியாக இருந்து கொண்டு, மற்றவர்களைக் குறை சொல்லுங்கள்.
வாருங்கள் சேர்ந்து வேலை செய்யலாம்... பர்சன்டேஜ் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் நேரடியாக பேச நான் தயார். வாங்க ஜாலியாக பேசலாம். இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது என் மக்கள் சந்தோசமாக கொண்டாடுகிறார்கள். கானா பாடல் பாடிக் கொண்டிருந்தவனுக்கு சர்வதேச அளவில் பாடல் பாட வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பாடலைக் கொண்டு சேர்க்கும் அனைத்து ஊடகங்களுக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சாருக்கும், ரகிட என்டர்டெயின்மென்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நான் மேலும் வளர வாழ்த்துங்கள்” என்று அவர் பேசியுள்ளார்.